இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில் 7 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரு நாடுகள் சண்டையில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய படைகள் தாக்கின. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியதால் இரு நாடுகளுக்குமிடையில் சண்டை மூண்டது. அதன்பின், இச்சண்டை சில நாள்களில் முடிவுற்றதாக திடீரென அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
டிரம்ப்பின் கருத்தை பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்த நிலையில், போரை நிறுத்தியதற்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி நன்றி தெரிவிப்பதாக சமீபத்தில் பேசியிருந்தார்.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் கொரிய குடியரசுத் தலைவருடனான இருதரப்பு சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து மீண்டும் டிரம்ப் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
”உலகின் பல போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்கும்.
நான் போர்களை எல்லாம் நிறுத்திவிட்டேன். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு பெரிய போராக இருந்திருக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். ஏற்கெனவே 7 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.
அத்தகைய பரபரப்பான சூழலில், நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? இப்படி நீங்கள் சண்டையிட்டுக்கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ளமாட்டோம். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் முடித்துக் கொள்ளவும் என்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.