அதிபர் டிரம்ப்புக்கு அடுத்தது யார்? இந்தியாவின் மருமகன்தான்!
டிரம்ப்புக்கு ஏதேனும் நேர்ந்தால், அதிபராக பதவியேற்கவும் தயார் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஏதேனும் நேர்ந்தால், அதிபர் பதவியை ஏற்கவும் தயார் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து அவ்வப்போது சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துகள் உலா வருகின்றன. இருப்பினும், அவர் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், டிரம்ப்புக்கு ஏதேனும் நேர்ந்தால், அதிபராகப் பதவியேற்கத் தயாராக இருப்பதாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இதுகுறித்து, ஜே.டி. வான்ஸ் அளித்த பேட்டியில்,
அதிபர் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். அமெரிக்க மக்களுக்கு அவர் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருவேளை, துரதிருஷ்டவசமாக ஏதேனும் நடந்தால், அதிபராகப் பணியாற்றவும் நான் தயார். இருப்பினும், ஒரு பயங்கரமான சோகம் வராமல் கடவுள் தடுக்கட்டும்.
அதிபர் பதவியை ஏற்க, தற்போதைய பணி என்னை தயார்ப்படுத்தியுள்ளது. கடந்த 200 நாள்களில், எனக்கு கிடைத்த அனுபவங்களைவிட சிறந்த பயிற்சி என்று எதுவுமில்லை. 2028 அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்பது டிரம்ப் கருத்து என்று தெரிவித்தார்.
துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (41), மிக இளம்வயதில் துணை அதிபராகப் பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி உஷா வான்ஸ், இந்திய வம்சாவளி ஆவார். இதனாலேயே இவரை இந்தியாவின் மருமகன் என்றும் இந்தியர்கள் அழைத்து வருகின்றனர்.