பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி..
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 10 தீவிரவாதிகள் பலியாகினர்.
பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் 21 பயணிகளும், 4 ராணுவ வீரர்களும் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு நாள்கள்கூட ஆகாத நிலையில் கைபர் பக்துங்வாவில் உள்ள எல்லைப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
பயங்கரவாதிகள் ஜந்தோலா சோதனைச் சாவடியைத் தாக்க முயன்றுள்ளனர். எல்லைப்புறப் படை முகாம் அருகே ஒரு வாகனத்தில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின் அடிப்படையில், பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளில் பாகிஸ்தான் 45 சதவிகிதத்துக்கு அதிகமான உயிரிழப்பை கண்டுள்ளது.
அதுமட்டுமின்றி 2023 ஆம் ஆண்டில் 748 முறை பயங்கரவாத தாக்குதல்களும், 2024 ஆம் ஆண்டில் 1,081 பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெற்றுள்ளது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.