டிரம்ப் 48 மணிநேரக் கெடு! வளைகுடா நாடுகள் தலையிட வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை
ஈரான் போரில் வளைகுடா நாடுகள் தலையிட்டு போரை முடிவுக்குகொண்டு வருமாறு ஐஏஇஏ முன்னாள் தலைமை இயக்குநர் வேண்டுகோள் விடுத்தது தொடர்பாக...
ஈரானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த 48 மணி நேர கெடு விவகாரத்தில், வளைகுடா நாடுகள் தலையிட வேண்டும் என சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) முன்னாள் தலைமை இயக்குநர் முகமது எல்பரதேய் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு முடிவை எட்டாமல் இருபக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு டிரம்ப் 10 நாள்கள் அவகாசம் கொடுத்திருந்தார். அந்த அவகாசம் முடிவடையப்போகும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
Advertisement
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) முன்னாள் தலைமை இயக்குநர் முகமது எல்பரதேய், டிரம்ப்பின் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த முடியாதா? என்ற கேள்வியை எழுப்பி,
“தயவுசெய்து, மீண்டும் ஒருமுறை, இந்த மனநோயாளி இப்பகுதியை முற்றிலுமாக அழிப்பதற்குள், உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்” என அண்டை வளைகுடா நாடுகளை நோக்கித் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகரித்து வரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் எல்பரதேய் பதிவுசெய்தார்.