முகப்பு
உலகம்

ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்: டிரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Updated On : 8 ஏப்ரல் 2026, 6:10 am IST
டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உடனடி பதிலடித் தாக்குதல் நடத்தியது.

கடந்த ஒரு மாதமாக இரு தரப்புக்கும் இடையிலான போரை நிறுத்துமாறு பல்வேறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், போர் நீண்டுகொண்டுதான் இருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் போர் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அனுப்பப்படவிருந்த படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய குடியரசான ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டதால், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.

இது இரு தரப்பிலுமான போர் நிறுத்தமாக இருக்கும். இதனைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாங்கள் ஏற்கெனவே ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஓர் உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் கிட்டத்தட்ட முன்னேறிவிட்டோம். மேலும், ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம்.

கடந்தகால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வார கால அவகாசம், ஒப்பந்தத்தை இறுதிசெய்ய நிறைவு செய்வதற்கு வழிவகுக்கும்.

அமெரிக்க அதிபராகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகால பிரச்னையின் தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது பெருமையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் மூடிய ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் போர்நிறுத்தம் மேற்கொள்ளுமாறும் கூறிய டிரம்ப், இல்லையெனில் புதன்கிழமை அதிகாலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, முழுமையாக அழிய இருக்கிறது என்றும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை, உலக நாடுகளிடையே சற்று சலசலப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஈரான் மீது எதிர்பாராத திடீர் போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

summary

US President Donald Trump suspends US attacks, Iran agrees to 2-week ceasefire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.