ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் திட்டமா? டிரம்ப் மீது எழும் குற்றச்சாட்டு!
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திட்டத்தில் உள்ள டிரம்ப், அது தொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் அமெரிக்க நாடாளுமன்ற பெண் உறுப்பினரான மார்ஜோரி டெய்லர் கிரீன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட கிரீன், "அமெரிக்காவின் போர் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில், ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் உண்மை. இதை ஊகத்தின் அடிப்படையில் நான் சொல்லவில்லை. இதுபற்றி எனக்கு உறுதியாகத் தெரியும். இது மிகவும் மோசமான செயல்.
Advertisement
Advertisement
கடைசியாக 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் 1,10,000 பேர் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சு நடைபெற்ற பகுதியின் மையத்தில் இருந்தவர்கள் ஆவியாகப் போயினர். கடுமையான தீக்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக அந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 2,14,000 பேர் பலியாகினர்.
ஆனால், கதிர்வீச்சு பாதிப்பு, புற்றுநோய் என மிக மோசமான பாதிப்புகள் என தலைமுறைகளாய் தொடரும் பிறவிக் குறைபாடுகளால் ஜப்பானிய மக்களுக்கு தொடர்ந்து துயரம் ஏற்பட்டது. அவர்களின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பும் அழிக்கப்பட்டது. அதன் துயரம் எந்தளவு கொடுரமானது என்றால், ‘இனி ஒருபோதும் அதுபோன்ற விஷயம் நிகழக்கூடாது’ என மனிதகுலம் மொத்தமும் உறுதிபூண்டது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் மிகத் தொலைவில் இருப்பதாக நமது உளவுத்துறை டிரம்ப் நிர்வாகத்திடம் தெரிவித்தது. ஆனால், ஈரான் அணு ஆயுதங்களை விரைவில் உருவாக்கவுள்ளதாக இஸ்ரேல் மீண்டும் மீண்டும் ஒரே கருத்தைத் தெரிவித்தது. ஆனாலும், நாம் ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம்.
ஈரானின் தலைவர்களையும், அப்பாவி பள்ளிக் குழந்தைகளையும் கொன்றோம். அதன் விளைவாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அந்தத் தாக்குதலுக்குத் துணைபுரிந்த பிராந்திய நாடுகளையும் கண்டித்தது.
ஆனால் இந்தப் போரில் 40 முறை வெற்றி பெற்றுவிட்டதாகவும் ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்காக அணு ஆயுதப் பயன்பாட்டு வரம்பைக் குறைப்பது பற்றி நமது அரசு விவாதித்து வருகின்றது.
வெளிநாடுகளில் இனி எந்தப் போரும் இருக்காது என்று டிரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால், ஒருவேளை அவரே ஒரு அணு ஆயுதப் பேரழிவை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த உலகையும் பெரும் மோதல், பொருளாதார மந்தநிலை மற்றும் நம் வாழ்நாளிலோ அல்லது வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத அளவிலான மனிதத் துயரத்திற்குள் தள்ளக்கூடும்.
வெளிநாடுகளில் இனி எந்தப் போரும் இருக்காது என டிரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால், ஒரு அணு ஆயுதப் பேரழிவை உண்டாக்கி, ஒட்டுமொத்த உலகையும் பெரும் மோதல், பொருளாதார வீழ்ச்சி என நம் வாழ்நாளிலோ, வரலாற்றிலோ கண்டிராத அளவிலான பெரும் துயரத்திற்குள் மனித குலத்தை தள்ளும் அழிவை அவரே மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற விபரீதங்கள் நிகழாமல் பாதுகாக்க வேண்டும்.
அமெரிக்கா ஒன்றும் பாதிப்புகளே ஏற்படாத நாடு அல்ல. அவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டால், மனித வரலாற்றின் எஞ்சிய காலம் முழுவதும் தற்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்கள். உடனடியாக இந்தப் போரை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவு டிரம்ப் அரசு மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
Trump has been accused of negotiating the use of nuclear weapons against Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.