வெளிநாடுகளின் மீட்புப் பணிக்கான உதவியை மறுத்திருக்கும் நேபாளம்!
மீட்புப் பணிகளில் உதவ முன்வந்த வெளிநாடுகளின் உதவிகளை நேபாளம் மறுத்துள்ளது பற்றி..
நேபாளத்தில் நேரிட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியை மேற்கொள்ள பல்வேறு நாடுகளும் தங்களது படை வீரர்களை அனுப்புவதாக கூறிய நிலையில், அதனை மறுத்திருக்கும் நேபாளம், தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினரே போதும் என அறிவித்திருக்கிறது.
தங்கள் நாட்டில் உள்ள பாதுகாப்புப் படையே, மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு திறன் பெற்றிருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.
ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட உடல்கள் மீட்கப்பட்டு வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியிருக்கிறது. போடே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து காத்மாண்டு போஸ்ட் வெளியிட்ட செய்தியில், நேபாள நாட்டின் வெளியுறவுத் துறைக்கு, மீட்புப் பணியில் உதவ பல்வேறு உலக நாடுகளிலிருந்து அதிகாரப்பூர்வமாகவும், தனிப்பட்ட முறையிலும், பல்வேறு சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு அமைப்பே, இப்பணிகளை மேற்கொள்ள போதுமானது என்று பதிலளித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளிடமிருந்தும் மீட்புப் பணியை மேற்கொள்ள படைகளை அனுப்புகிறோம் என உதவிக்கரம் நீட்டப்பட்டதாகவு, அவற்றை நேபாளம் வேண்டாம் என அறிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நேபாளத்தின் எல்லைக்கு அருகே திபெத்தின் லெண்டே ஆற்றில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி ஆற்றின் வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது.
மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த வெள்ளத்தில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீா்மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்தன.
சேறும், சகதியுமாக வந்த வெள்ளத்தால் புரட்டிபோடப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பிற முகமையினா் தொடரந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகதி குவியலிலிருந்து தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தோா் எண்ணிக்கை 500-ஆக அதிகரித்துள்ளது.
Nepal declined offers from foreign countries rescue operations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.