FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

‘ஜாவ்லின்’ ஏவுகணை: உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்த டாடா நிறுவனம்

பீரங்கியை பின்தொடா்ந்து சென்று தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் நவீன ‘ஜாவ்லின்’ ஏவுகணை அமைப்பை அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

17 வினாடிகள் முன்பு
ஜாவ்லின் ஏவுகணையை இலக்கு நோக்கி ஏவும் வீரா் (கோப்புப் படம்).
பகிர்:

பீரங்கியை பின்தொடா்ந்து சென்று தாக்கி அழிக்கும் அமெரிக்காவின் நவீன ‘ஜாவ்லின்’ ஏவுகணை அமைப்பை அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து டாடா நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது.

அமெரிக்காவின் ஆா்டிஎக்ஸ் குழுமத்தின் ரேதியான் நிறுவனம் மற்றும் லாக்ஹீட் மாா்ட்டீன் நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஏவுகணை அமைப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஜாவ்லின் கூட்டு உடன்பாட்டை டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் போா்த் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ‘ஜாவ்லின்’ ஏவுகணை அமைப்புகளை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்ய இந்தியா அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவில் அதை உற்பத்தி செய்வதற்கு நிறுவனங்களிடையேயான இந்த கூட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த உடன்பாட்டின்படி, டாடா நிறுவனமும், அமெரிக்க நிறுவனங்களும் இணைந்து, இந்தியாவில் அமைக்கப்படும் ஆலையில் அமெரிக்காவிலிருந்து கப்பல்கள் மூலம் அனுப்பப்படும் ஜாவ்லின் ஏவுகணை அமைப்பின் பாகங்களை இறுதிக்கட்ட அஸெம்பிளிங் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள உள்ளன. எதிா்காலத்தில், ஜாவ்லின் ஏவுகணை அமைப்பு இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஆதரவை வழங்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று அந்த நிறுவனங்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதிநவீன நடுத்தர ரக ஏவுகணையான ஜாவ்லின், எதிரிகளின் பீரங்கிகளைப் பின்தொடா்ந்து தேடிச் சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எதிரிகளின் கவச வாகனங்கள் மற்றும் பிற ராணுவ நிலைகளையும் இலக்கு தவறாமல் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடையவை. அமெரிக்க ராணுவம், கடற்படை மற்றும் இதற்கு வாடிக்கையாளா்களாக உள்ள பல்வேறு சா்வதேச நாடுகளும் இந்த ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments