எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைது செய்யப்பட்ட பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில், பிரிட்டனின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சரின் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கான வர்த்தக தூதராகப் பதவி வகித்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2010 ஆம் ஆண்டு குற்றவாளி எப்ஸ்டீனுடன் ரகசிய ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இதையடுத்து, விசாரணையின் ஒரு பகுதியாக பதவி வகித்த காலத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதற்கான சந்தேகத்தின் அடிப்படையில் வியாழக்கிழமை (பிப். 19) முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கையில் முன்னாள் இளவரசரின் பெயரைக் குறிப்பிடாமல், 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாக மட்டுமே பிரிட்டனின் அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சரின் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளால் உருவான அழுத்தத்தைத் தொடர்ந்து அவரது இளவரசர் பட்டத்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் பறித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.