ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவருக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2022-ல், 67 வயதான முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பின்னால் நின்றிருந்த யாமாகாமி என்பவர் அவரை மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டார்.
படுகாயமடைந்த ஷின்சோ அவசர சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ரத்த மாற்று உள்பட அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை, ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான டெட்சுயா யாமாகாமியை கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது. சம்பவ இடத்திலிருந்த நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் யாமாகாமியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருள்கள், 40 செ.மீ. துப்பாக்கி, கணினி உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
45 வயதான டெட்சுயா யாமாகாமி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்குத் தொடர்பாக யாமாகாமியின் வழக்குரைஞர் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வாதிட்டார். ஆனால், இந்த கொலையானது, நம் நாட்டில் நடந்த போருக்குப் பிந்தைய வரலாற்றில் இதுவரை நிகழாதது மற்றும் சமூகத்தில் ஏற்படுத்திய அதிதீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டினார். இதையடுத்து யாமாகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கொலைக் குற்றவாளி யாமாகாமி, போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாகப் பதிலளித்ததாகவும், ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறப்படும் வதந்திகளை நம்பியதால் அவரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்டதாக, விசாரணையில் அவர் தெரிவித்தார். அந்த அமைப்பை காவல்துறை அடையாளம் காட்டவில்லை. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மறுக்க முடியாத குறைபாடுகள் இருந்ததாக, படுகொலை செய்யப்பட்ட பகுதியின் காவல்துறை பொறுப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜப்பான் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகவும், மிகவும் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களையும் கொண்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. 2022-ல் நிகழ்ந்த இந்த சம்பவம் அந்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.