காங்கோவில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா பாதிப்பு; 754 பேர் பலி!
காங்கோவில் எபோலா பாதிப்பு 2,000-ஐக் கடந்துள்ள நிலையில், 754 பேர் பலியாகியுள்ளனர்.
காங்கோவில் ஊதியப் பிரச்னை காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், எபோலா நோய் பாதிப்பு முன்பைவிட மிக வேகமாகப் பரவி வருகிறது.
அந்நாட்டு அரசு வெளியிட்ட தரவுகளின்படி, உறுதி செய்யப்பட்டுள்ள எபோலா பாதிப்பு எண்ணிக்கை 2,011-ஐ கடந்துள்ளதாகவும், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 754-ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
எபோலா பாதித்தவர்களில் 753 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 366 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது சுகாதாரத் துறைக்கு சவாலானதாக மாறிவரும் நிலையில், இதுவரை 67% பேர் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
அரிதான புண்டிபுக்யோ வைரஸால் ஏற்படும் எபோலா நோய் கடந்த மே 15 முதல் காங்கோவில் பரவி வருகிறது. நோய்த் தொற்று பரவத் தொடங்கி 2 மாதங்கள் ஆன நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டாலும் நோய்ப்பரவலை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
புதிய நோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோரில் 80% பேர் எவரிடமிருந்து நோய்த் தொற்றைப் பெற்றனர் என்பது தெரியாமல் உள்ளது என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இது எவரிடமிருந்து பரவுகிறது என்பதை சுகாதார அதிகாரிகள் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அந்நாட்டில் நிலவும் ஆயுத மோதல்கள் மற்றும் சுரங்கத் தொழில் தொடர்பான மக்களின் இடம்பெயர்வுகள் காரணமாக, நோய் பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது சவாலாக உள்ளது. சமீபத்தில் பதிவான உயிரிழப்புகளில் பலரும் சுகாதார நிலையத்தை அணுகாமல் உயிரிழந்தவர்கள்.
நோய்ப் பரவல் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இட்டூரி மாகாணத்தில் சுகாதாரப் பணியாளர்கள் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலருக்கும் நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
காங்கோவில் கடந்த 16 முறை ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவல்களில், பெரும்பாலான தொற்றுகளுக்குக் காரணமாக இருந்தது ஜைர் வைரஸ். இதற்கு தடுப்பூசி உள்ளது. ஆனால், தற்போது பரவும் புண்டிபுக்யோ வைரஸுக்கு அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட மருந்துகளோ, சிகிச்சை முறையோ இல்லை என்பது இந்த நோய்ப் பரவலில் முக்கியப் பிரச்னையாக உள்ளது.
இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆய்வு இட்டூரியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
As Ebola cases in Congo have surpassed 2,000, 754 people have lost their lives.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.