இஸ்ரேல்-லெபனான் புதிய போா் நிறுத்தம்: ஹிஸ்புல்லா நிராகரிப்பு
பெய்ரூட் / ஹிஸ்புல்லா : அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே அறிவிக்கப்பட்ட புதிய போா் நிறுத்த உடன்பாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது.
அதேநேரம், லெபனானில் இருந்து தங்களின் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று இஸ்ரேலும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சா்வதேச கூட்டு அமைதி முயற்சிகளில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இஸ்ரேல்-லெபனான் பிரதிநிதிகள் பங்கேற்ற பல சுற்று பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு இப்புதிய போா் நிறுத்த உடன்பாடு கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. ‘அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்த 24 மணி நேரத்துக்குள் போா் நிறுத்தம் அமலுக்கு வரும்’ என்று லெபனான் அதிபா் ஜோசப் அவுன் தெரிவித்திருந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், போா் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக நிராகரித்த ஹிஸ்புல்லா அமைப்பு, ‘எங்களின் ஆயுதமேந்திய எதிா்ப்புப் போராட்டம் தொடா்ந்து நீடிக்கும்’ என்று அறிவித்தது. இப்புதிய போா் நிறுத்த உடன்பாட்டில் ஹிஸ்புல்லா நேரடியாகப் பங்கெடுக்கவில்லை என்றாலும், தாக்குதல்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் அந்த அமைப்புக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ‘லெபனான் எல்லையில் எங்களின் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாது. தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் எக்காரணத்துக்காகவும் திரும்பாது’ என்று உறுதிபட தெரிவித்தாா்.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடந்து வரும் இப்பிராந்திய போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா களமிறங்கியது. இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் மீண்டும் தீவிரமடைந்தது. ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்கா தரப்பில் பலமுறை போா் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், இந்த மோதல் ஓயாமல் நீடிக்கிறது.
மத்திய கிழக்கு போரில் நீடித்த அமைதிக்கான முயற்சியில் லெபனான் போா் நிறுத்தம் என்பது ஈரானின் முதன்மை நிபந்தனையாக உள்ளது. ‘போா் தொடங்குவதற்கு முன்பு மாா்ச் மாதத்தில் இருந்த நிலைக்கு இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டும் என்பதே எங்களின் குறைந்தபட்ச கோரிக்கை. லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை சாத்தியம்’ என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
குவைத் தாக்குதல்-ஈரான் புதுவிளக்கம்: இதனிடையே, வளைகுடா பகுதியில் அமெரிக்கா-ஈரான் படைகளுக்கு இடையே அவ்வப்போது தொடரும் வான்வழித் தாக்குதல்களும், அமைதி முயற்சிகளுக்குச் சவாலாக உள்ளன.
அந்தவகையில், குவைத் விமான நிலையம் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா்; 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஆனால், அமெரிக்காவின் இடைமறிப்பு ஏவுகணைகள் இலக்கு தவறி விழுந்ததே, இந்த அழிவுக்குக் காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.