ஆப்கனில் போராட்டங்களுக்குத் தடை! இஸ்லாமிய சட்டத்தைக் காரணமாகக் கூறும் தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானில் அனைத்து விதமாக போராட்டங்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது குறித்து...
ஆப்கானிஸ்தான் நாட்டில், போராட்டங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து விதமான மக்கள் போராட்டங்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இதற்குப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், போராட்டங்கள் இஸ்லாமிய சட்டங்களில் இல்லை என்பதாலும், ஆப்கனின் சட்டங்கள் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றுவதாலும் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகக் கூறி தங்களின் இந்த நடவடிக்கையை தலிபான் அரசு நியாயப்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதுபற்றி, தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறுகையில்,
“போராட்டங்கள், ஜனநாயகம் அல்லது குடியரசு போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்தவை. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், மக்கள் தங்களின் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக நேரடியாக அரசைத் தொடர்புகொள்ள முடியும். மேலும், இந்தத் தடை மக்கள் தங்களின் நேரத்தை வீணாக்குவதில் இருந்தும் பாதுகாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, அடிப்படை மனித மற்றும் பெண்ணுரிமைகள் கடுமையாக மறுக்கப்படும் ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் விதித்துள்ள இந்தத் தடையானது அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் ஒடுக்கும் முயற்சி எனக் கூறி சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தனியொரு மனிதருக்கு நடைபெறும் அராஜகங்களுக்கு எதிராக அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி போராட்டம் எனக் கருதப்படும் நிலையில், இஸ்லாத்தைக் காரணமாகக் கூறி தலிபான் விதித்த இந்தத் தடை பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பெண்ணுரிமைகளை வலியுறுத்தி ஹெராத் நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில், தலிபான் அரசின் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
International condemnation has arisen over the Taliban government's ban on protests in Afghanistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.