FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெருவெள்ளத்துக்கு அமெரிக்கா, சீனா, இந்தியாவே தார்மிக பொறுப்பு! நேபாளம் திட்டவட்டம்!

பெருவெள்ளத்துக்கு அமெரிக்கா, சீனா, இந்தியாவே தார்மிக பொறுப்பு என நேபாளம் தெரிவித்திருப்பது பற்றி...

14 வினாடிகள் முன்பு
நேபாள பெருவெள்ள பாதிப்பு - ANI
பகிர்:

நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக விளங்கும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தார்மிக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3,800 பேரைத் தேடும் பணி எட்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் விளங்குவதாகவும், இதற்காக அதிகளவில் பசுமைக்குடில் வாயு உமிழும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் பொறுப்பேற்று காலநிலை இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் காத்மாண்டு போஸ்ட் செய்திக்கு அளித்த பேட்டியில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்ததாவது:

”நேபாள பேரிடர் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. உலக வெப்பமயமாதலுக்கு கணிசமான அளவில் பங்களிக்கும் பசுமைக்குடில் வாயு உமிழும் முதல் மூன்று நாடுகளாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்திய உள்ளன. இந்தியாவும் சீனாவும் நேபாளத்துக்கு அண்டை நாடுகளாகவும், பசுமைக்குடில் வாயுவை அதிகளவில் உமிழும் நாடாக அமெரிக்காவும் உள்ளன.

நாங்கள் தர்மத்தையோ, உதவியையோ கோரவில்லை. நீதி மற்றும் இழப்பீடே தேவை. சட்டரீதியாகவும் தார்மிக ரீதியாகவும் பொறுப்பேற்க வேண்டிய விஷயம் இது.

நேபாளம் போன்ற பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் இதுபோன்ற நாடுகள் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து சர்வதேச அமைப்புகளிடம் நேபாள அரசு உறுதியுடன் தெளிவாக குரல் எழுப்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள பெருவெள்ளப் பேரிடரில் ஆயிரக்கணக்கான வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்பட நாட்டின் உள்கட்டமைப்பே சீர்குலைந்துள்ளது. புனரமைப்புப் பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ. 50,000 கோடி தேவைப்படும் என்று நேபாள அரசு மதிப்பிட்டுள்ளது.

இது நேபாள நாட்டின் பொருளாதாரத்தில் பத்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The US, China, and India bear moral responsibility for the massive floods—Nepal asserts!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments