வங்கதேசத்தில் அதிகரிக்கும் தட்டம்மை பரவல்: 1,000 குழந்தைகள் பலி!
வங்கதேசத்தில் பரவி வரும் தட்டம்மை நோயால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000-த்தை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் பரவி வரும் தட்டம்மை நோயால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,000-த்தை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் தட்டம்மை நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமாகப் பரவி வரும் இந்த நோயால் மருத்துவமனைகள் பலவும் நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளால் நிரம்பி வருகின்றன.
வங்கதேசத்தின் சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட 986 குழந்தைகள் தட்டம்மை நோயால் பலியானதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தட்டம்மை நோய் மிகவும் எளிதில் பரவக்கூடியது. இருமல், தும்மல் போன்றவற்றின் மூலம் பரவும் இந்த நோய் பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இதனால் மூளை அழற்சி, மூச்சுப் பிரச்னை போன்ற பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிப்பு எளிதில் ஏற்படும்.
17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசம், தட்டம்மை பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
ஒரு நாளில் 1,000-க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு மற்றும் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையை அனுகுவதாகக் கூறப்படுகிறது.
இதில், பெரும்பாலும் பாதிக்கப்படுவது 6 மாதங்கள் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளே. பல குழந்தைகள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுவதால், அவர்களது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்து அவர்கள் மேலும் பலவீனமடைவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வங்கேதேசத்தில் இளம் வயதினரைப் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகளை இந்த நோய்ப்பரவல் வெளிப்படுத்தியுள்ளது.
அந்நாடு, தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் இதற்கு முன்னர் பெரும் முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைப் பதவியிலிருந்து கவிழ்த்த கிளர்ச்சியின் காரணமாக, 2024-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் இயக்கம் தாமதமானது.
அதனை, தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் அரசியலில் உண்டான நிலையற்றத் தன்மையும் மேலும் தாமதப்படுத்தின.
Reports indicate that the number of children who have died from the spreading measles outbreak in Bangladesh is nearing 1,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.