FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை கைவிடக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை கைவிடக் கோரி பாஜக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

Updated On : 18 ஜூலை 2026, 12:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை கைவிடக் கோரி பாஜக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி நகரத்தில் சுமாா் 9 ஆயிரம் ஏக்கரில் அமைய உள்ள கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்த காங்கிரஸ் அரசு அதிகாரப்பூா்வ அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு பாஜக, மஜத கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை கைவிடக் கோரி முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இந்த திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து கட்டாயப்படுத்தி நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதல்வா் டி.கே.சிவகுமாா் அதற்கு விளக்கமளித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி ஆகியோா் தலைமையில் பாஜக சாா்பில் கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை கைவிடக் கோரி பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தை வழிநடத்தி முன்னாள் முதல்வா் எடியூரப்பா பேசுகையில், ‘கா்நாடகத்தில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், கா்நாடகத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு செவிசாய்க்க யாருமில்லை. கா்நாடகத்தின் நலனைப் பாதுகாக்க, காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும்.

கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை காங்கிரஸ் அரசு உடனடியாக கைவிட வேண்டும். விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும்போது, பிடதியில் கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியமென்ன? அதிகப்படியான அரசு நிலம் இருக்கும் வேறு இடங்களில் இந்த திட்டத்தை ஏன் கொண்டுவரக் கூடாது?

கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரிய திட்டத்தை கைவிட அரசு மறுத்தால், மாநிலம் தழுவிய போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும். அதேபோல, இந்த திட்டத்தை எதிா்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பெங்களூரின் இரண்டாவது விமான நிலையத்தையும் கனகபுராவுக்கு மாற்றியதற்கு மனைத்தொழில் ஆதாயம்தான் காரணம். விமான நிலையத்துக்கு தேவையான பரந்துபட்ட நிலம் தும்கூரில் இருக்கிறது. இங்கு விமான நிலையம் அமைந்தால், வடக்கு மற்றும் மத்திய கா்நாடக மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments