ரயில்வே கால அட்டவணை தமிழில் வெளியாகுமா?
சென்னை, செப். 1: ரயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரயில்வே கால அட்டவணை - 2009, மீண்டும் தமிழில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறை ஆண்டுதோறும் அகில இந்திய
சென்னை, செப். 1: ரயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ரயில்வே கால அட்டவணை - 2009, மீண்டும் தமிழில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறை ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் "ட்ரெயின்ஸ் அட் ஏ கிளான்ஸ்' என்ற கால அட்டவணையை வெளியிடுகிறது. ஆங்கிலத்தில் வெளியாகும் இந்த கால அட்டவணை பிரதிகள் ரூ. 30-க்கு விற்கப்பட்டன.
இதே போல கடந்த 2007 முதல் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன.
ஆனால், கடந்த ஆண்டுக்கான (2008) ரயில்வே கால அட்டவணை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டு.
இந்த ஆண்டாவது தமிழில் ரயில்வே கால அட்டவணையை பயணிகளின் தேவையைக் கருதி, கூடுதல் பிரதிகள் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கால அட்டவணை வெளியிடுவதில் தாமதம்: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ரயில்வே கால அட்டவணை வெளியாகும். ஆனால், இந்த ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதுள்ள கால அட்டவணையே அக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விவரங்களும் புதிய கால அட்டவணையில் சேர்க்கப்பட உள்ளன.
பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1 கோடியாக உயர்வு: சாதாரண விவசாயிகள் முதல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரைபடங்கள், அட்டவணைகள், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இதில் இடம்பெறும்.
ரயில்வே வெளியிடும் "ட்ரெய்ன்ஸ் அட் ஏ கிளான்ஸ்' கால அட்டவணையை பயன் படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை இப்போது 1 கோடியாக உயர்ந்துள்ளது,
கடந்த 2008-ல் இந்த கால அட்டவணை 10 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டு, சில நாள்களில் விற்பனையாகிவிட்டன.
இந்த ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணை வரும் அக்டோபர் அல்லது நவம்பர் முதல்வாரத்தில் வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.
பார்வைத் திறனுக்கு சவாலாக... ரயில்வே கால அட்டவணையில் பயணிகளின் சேவைக்கான ஏராளமான தகவல்கள் இடம் பெறுகின்றன. ஆனால், கண்களுக்குப் புலப்படாத வகையில், மிகச் சிறிய அளவிலான எழுத்துகளில் அச்சிடப்படுகின்றன.
"பார்வைத் திறனுக்குச் சவாலாக' இந்த எழுத்துகள் உள்ளதால், மூத்த குடிமக்கள் மட்டுமன்றி இளம் வயதினரும் ரயில்வே கால அட்டவணையைப் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இனியாவது, இதில் ரயில்வே துறை கவனம் செலுத்துமா?