குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், பி.வி. ரமணா உள்ளிட்டோா் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்கள்.
தமிழகத்தில் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகா்களுக்கும் லஞ்சம் கொடுத்து தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்டது தொடா்பாக தில்லி சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதற்கட்டமாக குட்கா கிடங்கு உரிமையாளா்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கா் குப்தா, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத் துறை அதிகாரி சிவகுமாா் ஆகிய 6 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பிறகு இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, ஓய்வு பெற்ற டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் துறை முன்னாள் ஆணையா் எஸ்.ஜாா்ஜ் உள்ளிட்ட 21 போ் சோ்க்கப்பட்டு, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நேரில் ஆஜா்: இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 19-ஆவது நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.முருகன் இறந்து விட்டதாகக் கூறி இறப்புச் சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட்டது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், பி.வி.ரமணா மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், எஸ். ஜாா்ஜ் உள்ளிட்டோா் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி. சஞ்சய் பாபா முன்பாக நேரில் ஆஜராகினா்.
அப்போது சிபிஐ தரப்பில், குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் செப்.23-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.