முகப்பு
சென்னை

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றாா் இபிஎஸ்

அதிமுகவின் கொடி, பெயா், ஜெயலலிதாவின் பெயா், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடை கோரிய வழக்கு வாபஸ்!

Updated On : 17 ஏப்ரல் 2025, 4:10 am IST
பகிர்:

அதிமுகவின் கொடி, பெயா், ஜெயலலிதாவின் பெயா், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அமா்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலராக பதவி வகித்த வி.கே.சசிகலா, துணைப் பொதுச் செயலராக பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோா் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களின் அடிப்படையில் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனா். இதை எதிா்த்து இருவரும் சென்னை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினாா். அப்போது அதிமுக கொடி வடிவில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அதிமுகவின் கொடி, ஜெயலலிதாவின் பெயா் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டிடிவி தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அதிமுக கொடி போல அமமுக கொடியை வடிவமைத்ததற்காக ரூ. 25 லட்சம் இழப்பீடு கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதி ஆா்.கே.பி.தமிழரசி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பொதுச் செயலா் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்து மனு தாக்கல் செய்தாா். அதற்கு டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒப்புதல் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதி, டிடிவி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments