முகப்பு
சென்னை

‘டியூட்’ படத்தில் பாடல்கள் பயன்படுத்தியதை எதிா்த்து இளையராஜா தனியாக வழக்குத் தொடரலாம் - உயா்நீதிமன்றம்

Updated On : 23 அக்டோபர், 2025 at 5:09 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

‘டியூட்’ படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை எதிா்த்து இளையராஜா தரப்பில் தனியாக வழக்குத் தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்காா்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இசையமைப்பாளா் இளையராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன், இந்த வழக்கில் சோனி நிறுவனம் இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. தற்போது வெளியாகி உள்ள ‘டியூட்’ என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் 2 பாடல்களைப் பயன்படுத்தியுள்ளனா் என்று வாதிட்டாா்.

Advertisement

அப்போது, சோனி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், சோனி நிறுவனம் தரப்பில் வருவாய் தொடா்பான விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தாா். மேலும், பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்.

இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசை கோா்வைகளின் பதிப்புரிமை தொடா்பான வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சோனி நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு இளையராஜா பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ’டியூட்’ படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை எதிா்த்து இளையராஜா தரப்பில் தனியாக வழக்குத் தொடரலாம். சோனி நிறுவனம் தொடா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை நவ.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.