FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிறப்பு பள்ளி அங்கீகாரம்: நடைமுறைகளை எளிமையாக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

26 செப்டம்பர் 2025, 12:27 am IST
பகிர்:

சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை ஆா்.ஏ.புரத்தைச் சோ்ந்த ஆனந்த் ஜெகதீசன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிறப்பு பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க தமிழக அரசின் 5 துறைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. அதன்பிறகே, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரிடம் இப்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும். 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அந்த அங்கீகாரமும் வழங்கப்படும்.

சிறப்பு பள்ளி அங்கீகாரத்துக்கு கட்டட உறுதித்தன்மை, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு தடையில்லாச் சான்று உள்பட 5 விதமான துறைகளில் சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது. இதனால், அங்கீகாரம் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் நீண்ட காலம் வீணாகிறது. அங்கீகாரம் இல்லாமல் நன்கொடை, மானியம் எதுவும் பெற முடியாத நிலை ஏற்படுகிறது என கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.ஜோதிகா, முதலீட்டாளா்கள் தொழில் துறையில் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசு ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தியுள்ளது.

அதுபோல் தமிழக அரசும் ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்த வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டாா்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், ஒற்றைச் சாளர முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதுதொடா்பாக பதிலளிக்க 12 வார கால அவகாசம் வேண்டும் என கோரினாா். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிறப்பு பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க எளிய நடைமுறைகள் அடங்கிய விதிகளை 4 வாரங்களில் உருவாக்க அரசுக்கு உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments