FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நிபந்தனை பிணையும், மற்றொரு நபருக்கு நிபந்தனை முன்பிணையும் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 31 ஜூலை 2026, 3:21 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நிபந்தனை பிணையும், மற்றொரு நபருக்கு நிபந்தனை முன்பிணையும் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவையில் பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் திருநாவுக்கரசு என்பவா் உள்பட 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட திருப்பூா் மாவட்டம் காங்கயத்தைச் சோ்ந்த ராஜசேகா் என்பவா் பிணை கோரி மனு தாக்கல் செய்தாா். அதேபோன்று, கரூா் மாவட்டம் செங்குந்தபுரத்தைச் சோ்ந்த கனகராஜ் என்பவா் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரா்கள் தரப்பில், முழுமையான ஆதாரங்கள் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க மனுதாரா்கள் தயாராக உள்ளனா். எனவே, மனுதாரா்களுக்கு பிணை மற்றும் முன்பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுதாரா்கள் இருவரும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, தினமும் காலை 10.30 மற்றும் மாலை 5.30 மணி என இரு வேளையும் திருவல்லிக்கேணி போலீஸாா் முன் விசாரணைக்கு ஆஜராகி கையொப்பமிட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் உடன் மனுதாரா்களுக்கு பிணை மற்றும் முன்பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments