கீரப்பாக்கத்தில் இடி இடித்ததில் தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்
வண்டலூா் அருகே கீரப்பாக்கத்தில் இடி விழுந்ததில் 2 தென்னை மரங்கள் தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு
வண்டலூா் அருகே கீரப்பாக்கத்தில் இடி விழுந்ததில் 2 தென்னை மரங்கள் தீ பற்றி எரிந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கோடைகாலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட வண்டலூா், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பேருந்து ஏற வந்த பயணிகள் மழையில் நனைந்தபடி பயணிகள் இருக்கைக்கு ஓடிச்சென்று தஞ்சம் அடைந்தனா். இந்த நிலையில், வண்டலூா் அருகே உள்ள கீரப்பாக்கம் கிராமம், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது பயங்கர சப்தத்துடன் இடி விழுந்ததில் அங்குள்ள இரண்டு தென்னை மரங்கள் தீப் பற்றி எரிந்தன. இதைக் கண்டதும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.