மூதாட்டிக்கு இதய வால்வு அடைப்பு நீக்கம்
சென்னையைச் சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட இதய வால்வு பிரச்னை, ரத்தக்குழாய் அடைப்பை அறுவைச் சிகிச்சை இல்லாமல் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் சரிசெய்து சாதனை
சென்னையைச் சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட இதய வால்வு பிரச்னை, ரத்தக்குழாய் அடைப்பை அறுவைச் சிகிச்சை இல்லாமல் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் சரிசெய்து சாதனை செய்துள்ளனர்.
இது குறித்து போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் டி.ஆர்.முரளிதரன், எஸ்.நாகேந்திர பூபதி, பி.வினோத், மயக்கவியல் நிபுணர் பி.ரஞ்சித் ஆகியோர் கூறியது:
சென்னையைச் சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு இதயத்தில் முக்கிய வால்வில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதே நேரத்தில் இதயத்துக்கு போகும் முக்கிய ரத்தக் குழாயிலும் கடுமையான அடைப்பு ஏற்பட்டிருந்தது. இந்த இரண்டு பிரச்னைகளும் மனிதர்களுக்கு சில விநாடிகளில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய மோசமான வியாதியாகும். இதற்கு இதுவரை அறுவைச் சிகிச்சைதான் தீர்வாக இருந்தது. இந்த அறுவைச் சிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலானதாகும். அப்படி அறுவைச சிகிச்சை மேற்கொண்டாலும் பின்விளைவுகளால் நோயாளிக்கு மரணம் ஏற்படலாம்.
எனவே, அனைத்து வழிகளிலும் முறையாக ஆய்வு செய்த பின்னர், தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை ஏதுமின்றி தொடையில் இருக்கும் ரத்தக் குழாயில் துளையிட்டு ஊடுருவல் சிகிச்சை மூலம் குழாய் அடைப்பை சரிசெய்ததோடு, ஒரே நேரத்தில் புதிய செயற்கை வால்வையும் இதயத்தில் பொருத்தினோம்.
இப்படி இரண்டு சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் செய்தது இதுவே முதல் முறை. மேலும் நோயாளி வயதானவர் என்பதால் மயக்க மருந்தை தீவிர ஆலோசனைக்குப் பிறகு, அவரது உடல் நிலைக்கேற்ப அளித்தோம். தற்போது அவர் சாதாரண நிலையில் உள்ளார்.
நோயாளிக்கு தேவைப்பட்ட முக்கிய உபகரணமான ஸ்டென்ட் அமெரிக்காவில் இருந்து வரவழைத்து சிகிச்சை மேற்கொண்டோம். அதோடு இந்த சிகிச்சையை விரைவில் முதல்வரின் விரிவான காப்பீடுத் திட்டத்தில் இணைக்க உள்ளோம் என அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.