சென்னை: மழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 32 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கனமழையால் நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் இருந்து பாங்காக், கொழும்பு, தில்லி, புனே, மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 13 விமானங்கள் கனமழையால் புறப்பட்டு செல்லவில்லை. வானிலை சீரானதும் மீண்டும் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானங்கள் சிறிது தாமதமாக புறப்பட்டு சென்றன.
இதையும் படிக்க: செம்பரம்பாக்கம் ஏரிக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இதேபோல் மலேசியா, ஹைதராபாத், தில்லி, பாங்காக் உள்பட 15 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியவில்லை. வானிலை சீரானதும் தரையிறங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் இருந்து வந்த விமானமும், துபாயில் இருந்து வந்த விமானமும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் ஜெர்மனி நாட்டின் பிராங்பார்ட்டில் இருந்து சென்னை வந்த விமானமும், தோகாவில் இருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாததால் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் வானிலை சீரானதும் 4 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தன.