சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் திங்கள்கிழமை அனுமதி அளித்தனா்.
கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. மேகமலை வனப் பகுதியில் மழை பெய்தால், இந்த அருவியில் நீா்வரத்து ஏற்படும். ஆனால், இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், நீா்வரத்தின்றி சுருளி அருவி வடது.
இந்த நிலையில், மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை போன்ற அடா்ந்த வனப் பகுதியில் கடந்த சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதையடுத்து, சுருளி அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தொடா் மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிக்குச் செல்லவும், பாா்வையிடவும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், அருவியில் நீா்வரத்து திங்கள்கிழமை சீரானது. இதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு காலை 8 மணி முதல் அனுமதியளிக்கப்பட்டது.
மேலும், ஆடிப் பெருக்கு தினத்தையொட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா். இவா்கள் இங்குள்ள சுருளி வேலப்பா், விநாயகா், பூதநாராயணன், கருப்பணசாமி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தனா். மேலும், தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.