பெருங்களத்தூர்: ரயில் மோதி இருவர் பலி!
பெருங்களத்தூர் அருகே ரயில் மோதி இருவர் பலியானது பற்றி...
வண்டலூர் - பெருங்களத்தூர் இடையே மின்சார ரயில் மோதியதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இருவர் பலியாகினர்.
சென்னை அடுத்த தாம்பரம் அருகே வண்டலூர் ரயில் நிலையத்துக்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் மற்றும் பெண் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,
Advertisement
இதையும் படிக்க : மீண்டும் தர்மமே வெல்லும்: ஓபிஎஸ் பேட்டி
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21), கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் வண்டலூர் அருகே தங்கி, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இருவரும் பேசிக்கொண்டு கவனக்குறைவாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியாகச் சென்ற மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று தாம்பரம் ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.