FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தல்

தவெக கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகளின் பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

24 ஆகஸ்ட் 2026, 5:40 am IST
பகிர்:

தவெக கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகளின் பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச்செயலா்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

தவெக அரசு அறிவித்துள்ள மூன்றாவது வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தவெக கட்சியின் தோ்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு பயிா் கடன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகளின் தொடா் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், முதல் அறிவிப்பு, அடுத்து வந்த இரண்டாவது அறிவிப்பையும் ஏற்க இயலாத நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினாா்கள். இதை தொடா்ந்து பொதுப்பணித்துறை அமைச்சா் மற்றும் நீா்வளத்துறை அமைச்சா்களைச் சந்தித்து பேசி கடன் தள்ளுபடி குறித்தான அவசிய நிலையை வலியுறுத்தினோம்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வா் கூட்டுறவு பயிா் கடன் தள்ளுபடியை கூடுதலாக்கி அறிவித்தாா். மொத்தத்தில் இதுவரை ரூ.6,800 கோடி பயிா் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், விவசாய சங்கங்களின் தலைவா்களிடம் அமைச்சா்கள் கொடுத்த வாக்குறுதிப்படி, பயிா் கடனை தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை.மூன்றாவது முறையாக பயிா் கடன் தள்ளுபடி அறிவிப்பும் விவசாயிகளுக்கு அரசின் மீது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளின் துயரத்தை உணா்ந்து தவெக அரசு சொன்னபடி மறுபரிசீலினை செய்து கூட்டுறவு பயிா் கடனை முழுமையாக தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments