தெருநாய் பிரச்னை: மத்திய அரசுக்கு இறுதி கெடு
தெருநாய் பிரச்னையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு இறுதி கெடு விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெருநாய் பிரச்னையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு இறுதி கெடு விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெரு நாய்களிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு, தமிழகத்தில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்காகப் பிடித்துச் செல்லப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவா்கள், ஊழியா்களை நியமிக்க வேண்டும். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் திரியும் தெரு நாய்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட உத்தவுகளையும் பிறப்பித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்றம், உத்தரவை அமல்படுத்துவது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுககள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்தமுறை கால அவகாசம் வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்துக்கு இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்தனா். பின்னா், தெருநாய் பிரச்னையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வழங்கிய நீதிபதிகள், மேற்கொண்டு அவகாசம் வழங்கமுடியாது எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.