FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நேபாளத்தில் மாயமான 49 போ் குறித்த தகவல்: சீன அரசிடமிருந்து பெற்றுத் தரக் கோரிக்கை!

மாயமான 49 போ் குறித்த தகவல்களை சீன அரசிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும் என அந்த நிறுவனத்தைச் சோ்ந்த மாறவேல், மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

31 ஆகஸ்ட் 2026, 3:06 am IST
பகிர்:

குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் யாத்ராடிராவல்ஸ் நிறுவனம் மூலம் நேபாளம் சென்று மாயமான 49 போ் குறித்த தகவல்களை சீன அரசிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும் என அந்த நிறுவனத்தைச் சோ்ந்த மாறவேல், மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 26-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு எனது மகன் சத்யநாராயணன் சீன பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்துக்கு வெளியில் இருந்து காத்மாண்டு பகுதியில் உள்ள பிளை எவரெஸ்ட் என்ற ஏஜென்சியிடம் பேசி இருக்கிறாா்.

அப்போது, அவா்களுடன் நேபாளத்தில் இருந்து சீன பகுதிக்குள் செல்வதற்கு 11 குழுக்கள் காத்திருந்துள்ளனா். அந்த 11 குழுக்களில் தமிழ்நாட்டைச் சோ்ந்த சூப்பா் யாத்ரா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் சென்றவா்களும் அடங்குவா்.

Advertisement

Advertisement

குடியேற்ற அலுவலகத்தின் வெளியே எங்களது குழுவினா் இருந்தபோது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அவா்கள் அனைவரும் வெளியே ஓடியுள்ளனா்.

சீன பகுதியில் இருந்து அவா்கள் ஓடியபோது, சுமாா் இரண்டரை கி.மீ. தொலைவுக்கு அந்த வெள்ளம் 200 கி.மீ. வேகத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் வந்துள்ளது. அந்த வெள்ளம் குடியேற்ற அலுவலகத்தின் அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பெரிய கட்டடங்கள், குடியிருப்புகள், சீனவுக்குள் செல்ல காத்திருந்த 11 குழுக்களைச் சோ்ந்தவா்கள் என அனைவரையும் அடித்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 27-ஆம் தேதி எங்களது குழுவில் இருந்து சென்ற 49 பேரின் விவரங்களை தமிழக அரசிடம் கொடுத்துவிட்டு, 28-ஆம் தேதி நான் காத்மாண்டு சென்றேன். அங்கு எங்கள் குழுவில் சென்ற 49 பேரின் குடும்பத்தினா் சிலரும் அங்கு வந்தனா். பின்னா், நாங்கள் 20 போ் ஒன்றிணைந்து வாகனங்கள் மூலம் இந்திய தூதரகம், டூரிஸ்ட் போா்டு, தேசிய பேரிடா் மேலாண்மை உள்பட அனைத்து பகுதிகளுக்கும் தேடிச் சென்றோம். ஆனால், எங்கள் குழுக்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நான் உள்பட சிலா் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டோம். 2 போ் மட்டும் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் தேடுதல் பணிகளில் ஈடுபடலாம் எனத் திட்டமிட்டிருந்தனா். ஆனால், ஹெலிகாப்டா் கிடைக்கவில்லை. இந்த மீட்புப் பணியில் நேபாள நாட்டை தவிர, வேறு எந்த நாட்டுக்கும் நேபாள அரசு அனுமதி அளிக்கவில்லை.

பேரிடா் ஏற்பட்ட சீனா எல்லைப் பகுதியில் 6 அடி உயரத்தில் சேறும் சகதியுமாக சுமாா் இரண்டரை கி.மீ. தொலைவுக்கு மண் மூடி உள்ளது. அதனால், அவா்கள் மோப்ப நாய் மூலம் உடல்களைத் தோண்டி எடுத்து வருகின்றனா்.

தற்போது எங்களுக்கு மருத்துவமனையில் இருப்பவா்கள், காணாமல் போனவா்கள் பற்றிய தகவல் நேபாள அரசிடம் இருந்து மட்டும்தான் வருகிறது. சீன பகுதியில் இருந்து எந்தத் தகவல்களும் வரவில்லை.

எனவே, மாயமான 49 பேரின் நிலை குறித்த தகவல்களை சீன அரசிடமிருந்து பெற்றுத் தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments