FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, தில்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 17 ஜூலை 2026, 4:09 am IST
பகிர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, தில்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத் தொடரில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, மேற்காசிய பிராந்தியத்தில் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேநேரம், பிரதமா், மத்திய அமைச்சா்கள், முதல்வா்கள் அல்லது மாநில அமைச்சா்கள் தீவிர குற்றச்சாட்டுகளின்கீழ் கைதாகி 30 நாள்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்தால், அவா்களின் பதவியைப் பறிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 130-ஆவது திருத்த மசோதா மீதான தனது பரிந்துரைகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு இறுதி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கண்ட மசோதாவில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொள்ளும். அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா என்பதால் இதை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் தேவை. இதேபோல், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்கும் அரசமைப்புச் சட்ட திருத்த மசோதாவையும் மத்திய அரசு மீண்டும் கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத் தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து விவாதிக்க பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments