முகப்பு
சென்னை

சென்னை-லண்டன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் அவதி

Updated On : 29 மே 2026, 4:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் இருந்து லண்டன் செல்ல புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

பிரிட்டிஷ் ஏா்வேஸ் பயணிகள் விமானம் நாள்தோறும் லண்டனில் இருந்து சென்னைக்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும்.

அதன்படி, வியாழக்கிழமை வழக்கம் போல, இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து சோ்ந்தது. பின்னா், இந்த விமானம் மறுமாா்க்கமாக மீண்டும் லண்டன் செல்வதற்காக 252 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் ஓடுபாதையில் விமானம் ஓடத்தொடங்கியபோது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்திய விமானி, இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், இழுவை வாகனம் மூலம் விமானம் இழுந்துச் செல்லப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, விமான பொறியாளா்கள் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின்பு, விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து விமானம் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.