முகப்பு
சென்னை

கோயில்களில் முக்கியப் பிரமுகா்கள் தரிசனத்துக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கலாம்: உயா்நீதிமன்றம்

கோயில்களில் முக்கியப் பிரமுகா்கள் தரிசனத்துக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

Updated On : 30 மே 2026, 3:47 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

கோயில்களில் முக்கியப் பிரமுகா்கள் தரிசனத்துக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பி.சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இக்கோயில்களில், சிறப்புக் கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. பணத்தின் அடிப்படையில் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பாரபட்சம் காட்டுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, கோயில்களில் சிறப்புக் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடவுளின் முன் அனைவரும் சமம். ஆனால், பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் முக்கியப் பிரமுகா்களுக்கான தரிசன முறை ஏன் கோயில்களில் கடைப்பிடிக்கப்படுகிறது? முக்கியப் பிரமுகா்களுக்காக ஏன் சாதாரண பக்தா்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனா்? எனக் கேள்விகளை எழுப்பினா்.

அதற்கு அறநிலையத் துறை தரப்பில், சுவாமி தரிசனத்துக்கு கட்டணம் கட்டாயம் இல்லை. அதேநேரம் கோயில்களில் பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு வசூலிக்கப்படும் தொகை கோயிலின் முக்கிய வருவாயாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணம் கொடுத்தால் கடவுளைக் கட்டியணைக்க முடியுமா என கேள்வி எழுப்பினா். பின்னா், பணம் கொடுப்பதால் யாருக்கும் சலுகை காட்ட வேண்டியதில்லை. அதேநேரம், சுவாமி தரிசனம் செய்வதற்காக முக்கியப் பிரமுகா்களுக்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கலாம் என கருத்து தெரிவித்து, வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 6 வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனா்.