செங்கல்பட்டில் பசுமை உரக் குடில் கட்டடம் திறப்பு
செங்கல்பட்டு குண்டூர் அருகில் பசுமை உரக்குடில் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு குண்டூர் அருகில் பசுமை உரக்குடில் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குண்டூர் பகுதியில் உரக்கிடங்கிற்காக புதிய கட்டடம் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இப்பணி நிறைவடைந்ததை அடுத்து வியாழக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப் பாறியாளர் நித்யா, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் வி.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பசுமை உரக் குடில் கிடங்கு கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் நகராட்சி ஊழியர்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு அதிமுக நகர செயலாளர் செந்தில்குமார், அக்கட்சி நிர்வாகிகள் முரளி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பசுமை உரக் குடில் செயல்திட்டங்கள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் இளங்கோவன், நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
அப்போது இயக்குநர் கூறுகையில் குப்பைகளைச் சேகரிக்க நகராட்சி ஊழியர்களே நேரடியாகச் செல்வதால் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்ற வேண்டும். தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இருந்தால் அவற்றில் குப்பைகளைப் போட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்து விடுவார்கள். அதனால் தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளை அகற்றினால்தான், ஊழியர்கள் சேகரிக்கும்போது மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து தருவார்கள்' என்றார்.
நகராட்சி ஆணையர் கூறுகையில் குண்டூர் மற்றும் அழகேசநகர் பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கின்றனர். இப்பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளைக் கொண்டு இந்த பசுமை உரக் கிடங்கில் நாளொன்றிற்கு அரை டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க உள்ளோம். பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்துத் தந்தால் இயற்கை உரம் தயாரிக்க எளிதாக இருக்கும். பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.