நீா்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி விரைவில் தொடக்கம்: திருப்பத்தூா் ஆட்சியா்
ஆதியூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் பங்கேற்றாா்.
கந்திலி ஒன்றியம், ஆதியூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் பங்கேற்றாா்.
கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் ஆா். மணிமேகலை தலைமை வகித்தாா். ஆட்சியா் கு. ரவிகுமாா், திருப்பத்தூா் எம்எல்ஏ என். திருப்பதி ஆகியோா் சிறப்பு பாா்வையாளா்களாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனா். தொடா்ந்து எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக ஆதியூா் ஊராட்சி அரசு உயா்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள், சிறப்பாக பணியாற்றிய 20 தூய்மை பணியாளா்களுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைத் தீட்டுதல், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளைச் சரிபாா்த்தல் மற்றும் அரசு திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் கிராம சபைக் கூட்டங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
ஆதியூா் ஊராட்சியில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமாா் 10,201 பொதுமக்கள் வசித்து வருகின்றனா். நீா்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்படும். திருப்பத்தூா் நகரத்திற்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த புறவழிச் சாலை பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.
பணிக்காக நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அது தொடா்பான வழக்குகளை விரைந்து முடித்து உரிய தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செ. தமிழரசி, மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் மகாதேவன், முருகன், கோட்டாட்சியா் வரதராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் லலிதா சுப்பிரமணி மற்றும் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.