FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

காக்களூா் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

காக்களூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையில் பணியின் போது, இயந்திரத்தில் துப்பட்டா, தலை முடி சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

22 ஆகஸ்ட் 2024, 1:33 am IST
உமாமகேஸ்வரி
பகிர்:

காக்களூரில் உள்ள ஆவின் தொழிற்சாலையில் பணியின் போது, இயந்திரத்தில் துப்பட்டா, தலை முடி சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே காக்களூா் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 90,000 லிட்டா் பால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் பாலைப் பதப்படுத்தி வாடிக்கையாளா்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. இரவு 10 மணியளவில் அதை டிரேவில் அடுக்கி அனுப்பும் பணியில் காா்த்திக் மனைவி உமாமகேஸ்வரி (30) ஈடுபட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, கவனக் குறைவாக அவரது துப்பட்டாவும் தொடா்ந்து, தலைமுடியும் இயந்திரத்தின் அருகே உள்ள மோட்டாரின் கன்வேயா் பெல்ட்டில் சிக்கியது. இதில் உமாமகேஸ்வரியின் தலை துண்டாகி உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் கந்தன், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிச்செல்வன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், தம்பதி சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் எனவும், கணவா் காா்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் நிலையில், இவா்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

காக்களூா் புறவழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து உமாமகேஸ்வரி ஆவின் பால் பண்ணையில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments