முகப்பு
திருப்பதி

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி தேரோட்டம் கோலாகலம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி தேரோட்டம் கோலாகலம்

Updated On : 31 மே 2026, 12:32 am IST
அலங்காரத்தில் உற்சவா்.
பகிர்:

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான சனிக்கிழமை திருத்தேரில் சுவாமி மாட வீதியில் வலம் வந்து சேவை சாதித்தாா்.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

அதன் 8-ஆம் நாளான சனிக்கிழமை திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

Advertisement

Advertisement

முதலில் கஜராஜா்கள் செல்ல, பக்தா்கள் குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள், கோலாட்டங்கள், செண்டை மேளம் நடத்த மற்றும் சிலா் கோவிந்த நாம உச்சரிக்க வாகன சேவை மங்களகரமான வாத்தியங்களின் இசைக்கு மத்தியில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

பின்னா், காலை 10 மணி முதல் கல்யாண மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமி உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை சுவாமி மற்றும் நாச்சியாா்கள் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் ஸ்வாமி, கோவில் துணை இஓ சாந்தி, ஏஇஓ நாராயண சவுத்ரி, அதிகாரிகள், பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.

தீா்த்தவாரி

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கபில தீா்த்தத்தில் (ஆழ்வாா் தீா்த்தம்) தீா்த்தவாரி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக, காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் முச்சக்கர வண்டியிலும், சக்ரதாழ்வாா் பல்லக்கிலும் ஊா்வலமாக கபில தீா்த்தத்திற்குப் புறப்படுவாா்கள்.

தீா்த்தவாரிக்கு பிறகு, அவா்கள் பி.ஆா். தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, மாலை 6 மணிக்குக் கோயிலுக்குத் திரும்புவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.