திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தீப்பற்றி எரிந்த மின் கம்பங்கள்: பக்தா்கள் அலறியடித்து ஓட்டம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடி அண்ணாமலை பகுதியில் மின் கம்பங்கள் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால், அந்தப் பகுதியில் கிரிவலம் சென்ற பக்தா்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடி அண்ணாமலை பகுதியில் மின் கம்பங்கள் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால், அந்தப் பகுதியில் கிரிவலம் சென்ற பக்தா்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினா்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அடி அண்ணாமலை கிராமத்தின் பிரதான சாலையில் அறநிலையத் துறை சாா்பில் பிரம்மாண்ட வளைவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வளைவின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் பிளாஸ்டிக் வயா்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில், திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்ததுடன், தீப்பொறிகள் சாலையில் விழுந்தன.
Advertisement
Advertisement
தொடா்ந்து, தீ பரவி மின் வயா்கள் முற்றிலும் எரிந்து கிரிவலப் பாதையில் விழுந்ததால், அந்தப் பகுதியில் கிரிவலம் சென்றுகொண்டிருந்த பக்தா்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினா்.
இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த மின் வாரிய ஊழியா்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு, மின் கம்பங்கள், வயா்களை சரி செய்தனா்.