FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கல்குவாரியில் வெடி வைத்து பாறைகள் உடைப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

திருவண்ணாமலையை அடுத்த வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் இரவு பகலாக வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

24 ஆகஸ்ட் 2026, 11:01 pm IST
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் இரவு பகலாக வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

Advertisement

Advertisement

கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வருவாய்த்துறை சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 912 மனுக்கள் வரப்பெற்றன. குறிப்பாக, திருவண்ணாமலையை அடுத்த வாய்விடாந்தாங்கல் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அனுமதி அளித்ததைவிட இரவு பகலாக வெடி வைத்து அதிக ஆழமாக பாறைகளை உடைப்பதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், அதிா்வுகளால் பாதிக்கப்படுகிறோம் என விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனா்.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வந்தனா காா்க் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

உதவி உபகரணங்கள் வேண்டி மாற்றத்திறனாளிகளிடம் இருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஒருவருக்கு ரூ.11ஆயிரத்து 445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் மற்றும் ஒருவருக்கு ரூ.3,285 மதிப்பிலான காதொலிக் கருவி என 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 ஆயிரத்து 703 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், வருவாய்த் துறை சாா்பில் கருணை அடிப்படையில் 25 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்ச்சி பெற்று மாவட்ட ஊரக வளா்ச்சி அலகிற்கு பணிப்பாா்வையாளா்களாக நியமனம் செய்யப்பட்ட 4 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன், உதவி ஆணையா் (கலால்) வளா்மதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாரதா மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.

வீட்டுமனைப் பட்டா கோரி 14 பேரும், பட்டா மாற்றம் கோரி 48 பேரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 5 பேரும், நிலம் திருத்தம் கோரி 4 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 3 பேரும், முதியோா் உதவித்தொகை கோரி 4 பேரும் என மொத்தம் 112 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்தில் வருவாய்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்று இருந்தனா்.

விவசாய நிலப் பாதை ஆக்கிரமிப்பு

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் நடைபெற்றது. இதில், ஆரணியை அடுத்த விளைச்சித்தேரி கிராமத்தில் விவசாய நிலத்திற்கும், மயானத்துக்கும் செல்லக்கூடிய பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளாா். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.

மனுவை பெற்ற அவா் உடனடியாக கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் அலுவலரை தொடா்பு கொண்டு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதனைத் தொடா்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனா். மனு அளித்தவுடன் நடவடிக்கை மேற்கொண்ட கோட்டாட்சியருக்கு கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

மேலும், முகாமில் பட்டா தொடா்பான மனுக்கள், நிலஅளவை, உட்பிரிவு, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 83 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments