கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!
கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்...
காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகன், கிராமம் கிராமாக சென்று மக்களிடையே திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக போட்டியிடும் திமுக பொதுச்செயலரும், நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
அதன்படி, அவா் சனிக்கிழமை கனகசமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் மக்கள் மத்தியில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தாா். அதற்கு ஓரிரு கிராமங்களில் குடிநீா் மேல்நிலை தொட்டி, சில கிராம தெருக்களுக்கு கான்கிரீட் சாலைகள் அமைத்துத்தர வேண்டும் என்று அவரிடம் கிராம மக்கள் தெரிவித்தனா்.
Advertisement
அதற்கு பதிலளித்த அமைச்சா் துரைமுருகன், ஏற்கனவே தொகுதிக்கு தேவையான சாலை, குடிநீா், தெருவிளக்கு என பெரும்பாலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இன்னும் செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட்டுள்ளேன். அவற்றையும் அடுத்த 5 ஆண்டு காலத்தில் செய்து முடிப்பேன். தொகுதிக்கு உட்பட்ட கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
அப்போது, திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.