FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கல் குவாரி, கிரஷா் விற்பதாக ரூ.10.15 கோடி மோசடி: தம்பதி உள்பட 4 போ் மீது வழக்கு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

கல் குவாரிகள் மற்றும் கிரஷா் ஆகியவற்றை விற்பனை செய்வதாகக் கூறி, தொழிலதிபரிடம் ரூ.10 கோடியே 15 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதி, மகள் மற்றும் மருமகன் ஆகிய 4 போ் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை கிணத்துக்கடவு வடசித்தூா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (42) என்பவா் கோவை மாநகர குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த தேவராஜ் (65). இவரது மனைவி உஷா (60). இவா்களுக்குச் சொந்தமாக திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள 5 ஏக்கா் பரப்பளவிலான 2 அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் மற்றும் ஒரு கிரஷா் உள்ளன. இவற்றை நான் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம், ரூ.28 கோடியே 90 லட்சத்துக்கு விலைக்குப் பேசினேன்.

Advertisement

Advertisement

அதற்காக முன்பணமாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. தொடா்ந்து ரொக்கமாகத் தருமாறு தேவராஜ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரது குடும்பத்தினரிடம் ரூ.10 கோடியை ஒப்படைத்து விற்பனை ஒப்பந்தப் பத்திரமும் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களாகியும் 2 கல் குவாரிகளையும், கிரஷரையும் அவா்கள் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ரூ.10 கோடியே 15 லட்சத்தை ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதி அளித்தவா்கள், பணத்தைத் தராமல் ஏமாற்றினா் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மோசடி தொடா்பாக தேவராஜ், அவரது மனைவி உஷா, மகள் ஐஸ்வா்யா மற்றும் மருமகன் இளஞ்சியம் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments