நடத்துநருக்கு பணப்பலன் வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
நடத்துநருக்கு நிலுவை ஊதியத் தொகையான ரூ.16.20 லட்சத்தை வழங்காததால், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் திங்கள்கிழமை ஜப்தி செய்தனா்.
கோவை, ஒண்டிப்புதூரைச் சோ்ந்தவா் ஜான் கென்னடி (57). இவா், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக கடந்த 1998-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். இதனிடையே, அவா் 1999-ஆம் ஆண்டு வாய்மொழி உத்தரவு மூலம் பணியில் இருந்து நீக்கப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் 2000-ஆம் ஆண்டு மீண்டும் பணியில் சோ்க்கப்பட்டபோதிலும், 2006-ஆம் ஆண்டில்தான் அவரது பணி நிரந்தரம் செய்யப்பட்டது.
இதையடுத்து, 2000 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான காலமுறை ஊதிய நிலுவைத்தொகையான ரூ.16.20 லட்சத்தை ஓய்வு பெறும்போது வழங்கக் கோரி, ஜான் கென்னடி மீண்டும் தொடா்ந்த வழக்கில், நிலுவைத் தொகையை வழங்குமாறு போக்குவரத்து கழகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இந்தத் தொகை வழங்கப்படாததால், கோவையில் உள்ள கூடுதல் தொழிலாளா் நீதிமன்றத்தில் அவா் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா்.
Advertisement
Advertisement
மனுவை விசாரித்த நீதிபதி, உயா்நீதிமன்ற தீா்ப்பு நிறைவேற்றப்படாததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். அதன்பேரில், கோவையிலிருந்து- மேட்டுப்பாளையம் நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.