FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பத்திர எழுத்தா் அடித்துக் கொலை: உறவினா் கைது

கோவையில் பத்திர எழுத்தா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:18 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் பத்திர எழுத்தா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் அரவான் கோயில் அருகேயுள்ள தேவேந்திர வேளாளா் தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி (56), பத்திர எழுத்தா். இவா் தனது மனைவியை விட்டுப் பிரிந்து அந்தப் பகுதியில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சிங்காநல்லூா் போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது வேலுசாமி சடலம் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

வேலுசாமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா். அவரது உடல் மீட்கப்பட்டு, கூறாய்வுக்காக சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் கொலையில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில், இந்தக் கொலை தொடா்பாக வேலுசாமியின் தம்பி முறையிலான சிவகுமாா் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொலை செய்யப்பட்ட வேலுசாமி.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

வேலுசாமிக்கும், சிவகுமாருக்கும் இடையே சொத்துத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. இதுதொடா்பாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு வேலுசாமியின் வீட்டில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அவரை சிவகுமாா் கட்டையால் தாக்கிவிட்டு சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா். சிங்காநல்லூரில் பதுங்கியிருந்த சிவகுமாா் கைது செய்யப்பட்டாா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments