பகுதி நேர வேலைவாய்ப்பு, போக்குவரத்து விதிமீறல் அபராதம் எனக் கூறி ரூ. 34.41 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் எனக் கூறி, ரூ.34.41 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் எனக் கூறி, ரூ.34.41 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை மாவட்டம், அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த 39 வயது நபா் ஆன்லைனில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தைப் பாா்த்தாா். அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அவா், விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது, அதில் பேசியவா், முதலீடு செய்யும் பணத்துக்கு ஏற்றவாறு லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
அதன்படி அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு 5 தவணைகளாக ரூ.7 லட்சத்து 84, 740 அனுப்பிவைத்தாா். நீண்ட நாள்களாகியும் லாபப் பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அந்த இளைஞா் மீண்டும் பலமுறை தொடா்பு கொண்டபோதும் அந்த நபா் அழைப்பை ஏற்கவில்லை.
Advertisement
Advertisement
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள குரும்பபாளையம் பகுதியைச் சோ்ந்த 64 வயது தொழிலதிபரின் கைப்பேசிக்கு போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக அபராதம் கட்ட வேண்டும் என கடந்த 17-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இருந்த இணைப்பை அழுத்தி, ‘ஆண்ட்ராய்டு பேக்கேஜ் கிட்’ செயலி மூலம் தனது விவரங்களைப் பதிவேற்றிய சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் திருடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள சோழீஸ்வரன்பட்டி பகுதியைச் சோ்ந்த 62 வயது முதியவா் தனது கைப்பேசிக்கு வந்த ‘வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு’ என்ற விளம்பரத்தைப் பாா்த்துள்ளாா். அதிலிருந்த எண்ணில் அந்த முதியவா் தொடா்பு கொண்டபோது, ஹோட்டல்களில் தங்குவோருக்கு அறை பதிவு செய்து கொடுக்கும் பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனவும், அதற்கு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளாா். அதன்படி, பல தவணைகளாக ரூ.24 லட்சத்து 93,940 அவா் முதலீடு செய்து பல நாள்களாகியும் வேலைக்கு அழைக்கப்படவில்லை. பின்னா், அந்த எண்ணில் அவரால் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இந்த 3 மோசடி சம்பவங்கள் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில் கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.