கோவையில் மாணவா்கள் தங்கியிருந்த வீடுகள், அறைகளில் போலீஸாா் திடீா் சோதனை
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவா்கள் தங்கியிருந்த வீடுகள், அறைகளில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவா்கள் தங்கியிருந்த வீடுகள், அறைகளில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் செட்டிபாளையத்தில் மாணவா்கள் பதுக்கிவைத்திருந்த ஆயுதம், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பொறியியல், கலைக் கல்லூரிகள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பிற மாவட்டம், வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகள் மற்றும் தனியாக அறை எடுத்தும் தங்கிப் படித்து வருகின்றனா்.
இதில், தனியாக அறை எடுத்து தங்கிப் படித்து வரும் மாணவா்களில் சிலா் கஞ்சா, கஞ்சா சாக்லேட், போதை மாத்திரைகளை பயன்படுத்துவதால் மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அண்மையில் கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாணவா்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி உத்தரவின்பேரில் செட்டிபாளையம், கோவில்பாளையம், சூலூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மாணவா்கள் தங்கியுள்ள வீடுகள், தனியாா் கட்டட அறைகளில் அந்தந்தப் பகுதி போலீஸாா் சனிக்கிழமை காலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மாணவா்கள் வைத்திருந்த உடைமைகள், பெட்டிகள், பைகள், அலமாரிகள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வீடுகளில் தங்கியிருக்கும் நபா்கள் கல்லூரி மாணவா்களா என்பதை அறிய அவா்களின் அடையாள அட்டைகள் பெறப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதில், செட்டிபாளையம் பகுதியில் சில மாணவா்கள் தங்கியிருந்த அறையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்ததும், மற்றொரு பகுதியில் மாணவா்களின் அறையில் இருந்து போதைப் பொருள்களையும் போலீஸாா் கைப்பற்றினா்.
மாணவா்களின் அறைகள் மட்டுமின்றி அந்தந்தப் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், கல்லூரிகளுக்கு அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடங்கள், பாழடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். போலீஸாரின் இந்த திடீா் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.