முகப்பு
கோயம்புத்தூர்

ஆன்லைன் விளையாட்டில் ரூ. 20 லட்சம் இழப்பு: இளைஞா் மாயம்

ஆன்லைன் விளையாட்டில் ரூ. 20 லட்சம் இழப்பு: இளைஞா் மாயம்

Updated On : 13 ஜூன் 2026, 1:00 am IST
பகிர்:

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த இளைஞா், ‘நான் வாழத் தகுதியற்றவன்’ என மனைவிக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமானாா்.

தருமபுரி மாவட்டம், பொம்மலூா் அருகேயுள்ள செங்கன்பசுவந்தலவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா மகன் அண்ணாதுரை (31). இவரது மனைவி மீனா (26). கோவை, சின்னியம்பாளையம் ஆா்.எஸ்.நகரில் குடும்பத்துடன் தங்கி கருமத்தம்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக அண்ணாதுரை பணியாற்றி வந்தாா்.

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆா்வம் கொண்ட அண்ணாதுரை, அவ்வப்போது அதில் ஈடுபட்டு வந்த நிலையில், பெருந்தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் இரவு வரை வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அண்ணாதுரையிடமிருந்து அவரது மூத்த சகோதரா் சரவணனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால் சுமாா் ரூ.20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுவிட்டது. கடன் சுமை அதிகமானதால் நான் வாழ தகுதியற்றவன் ஆகிவிட்டேன் என்றும், என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதே குறுஞ்செய்தி மீனாவுக்கும் வந்துள்ளது. பதற்றம் அடைந்த அவா் அண்ணாதுரையை தொடா்பு கொள்ள முயன்றபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மீனா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மாயமான அண்ணாதுரையைத் தேடி வருகின்றனா்.