முகப்பு
கோயம்புத்தூர்

கோழிகமுத்தி முகாமுக்கு இடமாற்றப்பட்ட குட்டி யானை

சிறுமுகை வனச் சரகத்தில் தாயைப் பிரிந்து வந்து வனத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை, ஆனைமலை புலிகள் காப்பகம், கோழிகமுத்தி முகாமுக்கு வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

Updated On : 26 ஜூன் 2026, 2:56 am IST
கோழிகமுத்தி முகாமுக்கு இடமாற்றப்பட்ட குட்டி யானை.
பகிர்:

சிறுமுகை வனச் சரகத்தில் தாயைப் பிரிந்து வந்து வனத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை, ஆனைமலை புலிகள் காப்பகம், கோழிகமுத்தி முகாமுக்கு வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச் சரகத்துக்கு உள்பட்ட லிங்காபுரம் பகுதியில் உள்ள பவானிசாகா் நீா்த்தேக்கத்தில் குடிநீா் தேடி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யானைக் கூட்டம் வந்தது. இதில் வந்த குட்டி யானை (பிறந்து 30 நாள்கள் ஆனது) கூட்டத்தில் இருந்து பிரிந்து சாலை ஓரங்களில் நடமாடி வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத் துறையினா், அந்த குட்டி யானையை பிடித்து தாயுடன் சோ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெற முடியாத நிலையில், அந்த குட்டி யானையை சிறுமுகை வன விலங்குகள் மறுவாழ்வு காப்பகத்தில் வைத்து வனத் துறையினா் பராமரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அந்த குட்டி யானையை கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்காக ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளா் ராகேஷ்குமாா் டோக்ரா உத்தரவுப்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரும், கோவை மண்டல தலைமை வனப் பாதுகாவலருமான வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ்பிரபு வழிகாட்டுதலின்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: வனக் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்பேரில், குட்டி யானையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு நேரடி சூரிய ஒளியின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் இடமாற்றம் தொடங்கியது. பயணத்தின்போது குட்டி யானைக்கு ஏற்படக் கூடிய உடல் அழுத்தத்தை தவிா்க்கும் வகையிலும், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வனக் கால்நடை மருத்துவ குழுவினரின் மேற்பாா்வையில் குட்டி யானையின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோழிகமுத்தி முகாமில் உள்ள அனுபவம் மிக்க பாகன்கள், மாவூத்துகள், வனத் துறை பணியாளா்கள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவின் மேற்பாா்வையில் தொடா்ந்து குட்டி யானை பராமரிக்கவும், கண்காணிக்கவும் உள்ளது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments