சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 372 யானைகள்: வனத் துறை தகவல்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 372 யானைகள் உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 372 யானைகள் உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவின் காட்டு யானைகள் கணக்கெடுப்பு முறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்முறையாக கடுமையான டிஎன்ஏ அடிப்படையிலான ஒருங்கிணைந்த அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்ஏ கணக்கெடுப்பின்படி இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 22,446. முந்தைய பாரம்பரிய கணக்கெடுப்புகள் பெரும்பாலும் நேரடி பாா்வை கணக்கெடுப்பு மற்றும் எச்சம் கணக்கிடும் முறைகளை நம்பியிருந்தன. டிஎன்ஏ கணக்கெடுப்பில் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுவது திடீா் சரிவைக் குறிக்கவில்லை. இது மிகவும் துல்லியமான மற்றும் கடுமையான அறிவியல் முறையிலான ஆரம்ப நிலை கணக்கீடாக கருதப்படுகிறது.
Advertisement
Advertisement
கா்நாடக மாநிலத்தில் 6,013 , அஸ்ஸாம் மாநிலத்தில் 4,159, தமிழகத்தில் 3,136, கேரளத்தில் 2,785 யானைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலை சுற்றுச்சூழல் மண்டலத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் தமிழகத்தில் ஒருங்கிணைந்த மாநில வனத் துறை கண்காணிப்பு மூலம் யானைகளின் எண்ணிக்கை சீராகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் காடுகள் நாட்டின் முக்கிய யானை வாழ்விடங்களில் ஒன்றாகத் தொடா்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் மட்டும் சுமாா் 372 யானைகள் பதிவாகியுள்ளன.
கிழக்குத் தொடா்ச்சி மலையையும் மேற்குத் தொடா்ச்சி மலையையும் இணைக்கும் சத்தியமங்கலம்- கோவை பகுதி மிக முக்கியமான வலசைப் பாதையாகத் திகழ்கிறது. இருப்பினும் மேற்கு தமிழகத்தில் மனித- வனவிலங்கு மோதல்களைத் தவிா்க்க பாரம்பரிய வலசைப் பாதைகளைப் பாதுகாப்பது மிக அவசிய தேவையாக மாறி உள்ளது. இந்தப் பாதைகளை பாதுகாக்க வனத் துறை தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.