கோவை அருகே கீழடிக்கு முந்தைய காலகட்ட கடல் சங்கு, குழி வீடுகள்
வடவள்ளி : கோவை அருகே நடத்தப்பட்ட அகழாய்வில் கீழடிக்கும் முந்தைய காலகட்ட கடல் சங்கு, மணிகள், குழி வீடுகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், பூலுவபட்டியை அடுத்த மோளப்பாளையம் கிராமம் மூலக்காடு பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய கால வரலாற்று துறைத் தலைவர் பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் கடந்த 2021, 2024}ஆம் ஆண்டுகளில் 2 முறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். இதில் பல்வேறு கற்கால பொருள்கள் மற்றும் மனிதர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பபட்டன.
இந்த நிலையில் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் 85 முதுகலை மாணவர்கள் அடங்கிய குழுவினர் இந்த பகுதியில் 3}ஆவது முறையாக அகழாய்வு பணிகளை 47 நாள்களாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கீழடிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த புதிய கற்கால பொருள்கள் மற்றும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
Advertisement
இதுகுறித்து பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது:
மோளப்பாளையத்தில் உள்ள தொல்லியல் இடம் புதிய கற்கால மக்களின் வாழ்விடமாக அமைந்துள்ளது. கி.மு. 1600 முதல் கி.மு. 200}க்கு இடைப்பட்ட காலம் என்பது ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்து அமைந்து உள்ள இந்த இடத்தில் பல குழி வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
மேலும் குழியில் பானைகள் வைப்பதற்கான அடுக்குகளையும் உருவாக்கி உள்ளனர். தற்போது 2 குழந்தைகளின் முழு எலும்புக் கூடுகளையும் கண்டெடுத்து உள்ளோம். இத்துடன் மான், ஆமை, ஆடு, மாடு போன்றவற்றின் எலும்புகள் மற்றும் காண்டா மிருகத்தின் கால் எலும்பும் கிடைத்து உள்ளது. இந்தக் குழிகளில் அம்மி போன்ற அரவை கற்கள், தானியங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளைத் தயாரித்து உள்ளனர். விலங்குகளின் மாமிசமும் உணவாக அமைந்து உள்ளது. கற்கோடரிகளை உருவாக்கிய அவர்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது.
இந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட பொருள்கள் கீழடிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றார்.