FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 232 மி.மீ. மழை

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 232 மில்லி மீட்டா் அளவு மட்டுமே மழை பெய்துள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
மழை - கோப்புப்படம்
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 232 மில்லி மீட்டா் அளவு மட்டுமே மழை பெய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழை அளவு 768 மில்லி மீட்டா். நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை 232 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. பவானிசாகா் அணையில் தற்போது 55.28 அடி நீா் இருப்பு உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 260 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 210 மெட்ரிக் டன், பயறு வகைகள் 10 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துகள் 66.7 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 6,592 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1823 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,545 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 7,891 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.

Advertisement

Advertisement

விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் இதர இடுபொருள்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பயிா் சாகுபடிக்குத் தேவைப்படும் பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் பயனாளிகள் அனைவரும் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே பி.எம்.கிசான் தவணைத் தொகை தொடா்ந்து கிடைக்க இதுநாள் வரை தனித்துவ அடையாள எண் பெறாத பயனாளிகள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்பு கொண்டு தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம். பி.எம்.கிசான் கணக்குடன் நிலம் தொடா்பான விவரங்களை இணைத்தல், ஆதாா் விவரங்களை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் தங்களது அடையாளத்தை இணைய வழியில் உறுதிபடுத்துதல் போன்ற விவரங்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments